banner
சோழநாடு - திருபாலைத்துறை

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 310 கி.மீ., தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 15 ஆவது கி.மீ. ல் உள்ளது இத் தலம். பாபநாசத்திலிருந்து 1 கி.மீ. செங்கல்பட்டிலிருந்து 330 கி.மீ., சென்னையிலிருந்து 380 கி.மீ. திருச்சியிலிருந்து 73 கி.மீ. மதுரையிலிருந்து 203 கி.மீ.
வரிசை எண் : 136
சிறப்பு : தாருகாவனத்து முனிவர்கள் தீய வேள்வி செய்து அதன் மூலம் ஒரு புலியை வரச்செய்து அதனை இறைவன் மீது ஏவ இறைவன் அப்புலியை அழித்து அதன் தோலை உடுத்திக் கொண்ட தலம். திருமுறைகளில் தேவாரத்தில் நடுவாக இருக்கும் அப்பர் தேவாரத்தில் நடுவில் இருக்கும் திருமுறையாகிய ஐந்தாம் திருமுறையில் (குறுந்தொகை) நடுப்பதிகமாகிய 51 ஆவது பதிகத்தில் (மொத்தம் 100 பதிகம்) நடுப்பாடலாகிய 6 ஆவது பாடலில் (மொத்தம் 11 பாடல்) நட ு வரியாகிய இரண்டாவது வரியின் கடைசியில் (மொத்தம் நான்கு வரி) நடு மந்திரமான சிவாயநம (முதல் மந்திரம் : நமசிவாய, நடு மந்திரம் : சிவாயநம, கடைசி மந்திரம் : சிவயசிவ) அமைந்துள்ள பேரதிசயத்தைக் காணலாம். இந்த சிவாயநம என்னும் மந்திரத்துள்ளும் ‘ய’ என்னும் எழுத்து நடுவில் உள்ளதைக் காணலாம். ‘ய’ என்பது உயிரைக் (ஆன்மா) குறித்தது. அதாவது நம்மைக் குறித்த்து. ‘சி’ என்ற எழுத்து சிவனையும் ‘வா’ என்ற எழுத்து அருட்சக்தியாகிய உமாதேவியையும் குறித்தது. ‘ந’ என்பது ஆன்மாவை மறைத்திருக்கும் திரோதான சக்தி அதாவது இறைவனை நாம் அறியமுடியாதபடி செய்யும் சக்தி. ‘ம’ என்பது நம்மை (ஆன்மாவை) பீ(பி)டித்திருக்கும் மலங்கள். இறைவனுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நாம் இருக்கிறோம் என்பதை எவ்வளவு அழகாக இந்த பாடல் அமைப்பு விளக்குகிறது! இந்த்த் தீயச் சக்திகளையெல்லாம் உதறித் தள்ளுபவர்களுக்கு அடுத்த மந்திரமான சிவயசிவ காத்திருக்கிறது. அதிலே ‘ந’ வுக்கும் ‘ம’ வுக்கும் வேலையில்லை. சிவாயநம எனச் சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பது ஔவையார் வாக்கு. இந்த மந்திரம் அமைந்த அப்பரின் (வாகீசரின்) பாடலும் அதைத்தான் விளக்குகிறது. இவ்வாலயத்துள் அக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு நெற்களஞ்சியம் (நெற்குதிர்) உள்ளது. அதன் கொள்ளளவு 12000 கலம். அக்கால மக்கள் செழிப்பினை இதன் மூலம் அறியலாம். சுவாமியும் அம்பாளும் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த கோயிலுக்கு நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன.
இறைவன்: பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
இறைவி : தவளவெண்ணகையாள், தவளாம்பிகை
தலமரம் : பாலை
தீர்த்தம் : வசிட்ட தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. பாலைவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் – 614 205, பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 09.00 – 12.00 ;மாலை 05.30 – 08.00
தொடர்புக்கு : 9443524410

இருப்பிட வரைபடம்


விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையரே
    - அப்பர்
பாடல் கேளுங்கள்
 விண்ணினார் பணிந்து


Zoomable Image

சோழநாடு தலவரிசை தரிசிக்க பெரிய வரைபடத்தில் காண்க