திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தபோது ஒருவர், “நான் ஏன் பிறந்தேன் என்பதற்கு ஒரே வரியில் எனக்கு விளக்கம் அளிக்க முடியுமா?” என்று கேட்டார். சுவாமிகள் சிரித்துவிட்டு, “மீண்டும் பிறக்காமல் இருப்பதற்காகப் பிறந்திருக்கிறாய்” என்றார். கேட்டவர் விழித்தார். சுவாமிகள் தொடர்ந்தார். “ஆம். மீண்டும் பிறவி வலையில் சிக்காமல் இருப்பதற்காக இந்தப் பிறவியில் நல்லவனாக வாழ்ந்து வினைகளை நீக்கி மீண்டும் பிறவா நிலையை நீ அடையவேண்டும் என்பதற்காக இறைவன் உனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறான்” என்றார். சாதாரண பாமர மனிதன் தொடங்கி அருளாளர்கள் வரை மீண்டும் பிறக்க வேண்டாம் என்றே விரும்புகின்றனர். பிறவியைத் துன்பம் என்றும் நோய் என்றும் வருணிப்பர். ஆனால் மீண்டும் பிறக்க விரும்பியவர் ஒருவர் உண்டு. அவர்தாம் நமது வாகீசர் பெருமான். இறைவனுடைய பேரழகைக் காணவும் அவனை ரசிக்கவும் அவனை அனுபவிக்கவும் வேண்டுமானால்,
மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்றார். இவரைப் போன்றே ஏனைய நாயன்மார்களும் சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலையில் இருந்தவர்கள். இவர்கள் முத்தி இன்பத்தையும் விரும்பவில்லை. இவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்த பண்பாளர்கள். நாயன் என்ற சொல் நாயகனாகிய சிவனைத் தவிர மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது அவனையே தனது வாழ்வின் மற்றும் உயிரின் நாயகனாகக்கொண்டும், சித்தத்தைச் சிவனோடு நிறுத்தியும், சிவனடியார்களையும் சிவச் சின்னங்களையும் சிவமாகவேப் பாவித்து, மூவாசைகளையும் துறந்து, துஞ்சிருள் காலை மாலைத் தொடர்ச்சியை மறந்திராது இருந்த நாயன்மாரைக் குறிக்கும். சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத்தொகையில் தன்னை இறுதியில் வைத்து 63 நாயன்மார்களைப்பற்றியும், தொகையடியார்களாக 9 பிரிவினரையும் சேர்த்து 72 நாயன்மார்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறார். சேக்கிழார் வாக்கில் இவர்கள் வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள். அப்படிப்பட்ட நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர் !!
|